பிரான்ஸில் கடந்த மார்ச் மாதத்தின் பின்னர் மிக அதிகளவாக 7,379 புதிய கொரோனா தொற்று நோயாளா்கள் நேற்று பதிவாகியுள்ளனர்.
ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன் நாடு தழுவிய அளவில் மற்றொரு சமூக முடக்கலுக்கான வாய்ப்பு குறித்து நேற்று கருத்து வெளியிட்டிருந்த நிலையில் தொற்று நோயாளர் தொகை மேலும் பாரிய அதிகரிப்பை பதிவு செய்துள்ளது.
நேற்று வெள்ளிக்கிழமை உறுதிப்படுத்தப்பட்ட 7,379 புதிய தொற்று நோயாளர்களுடன் பிரான்ஸில் தொற்று நோயால் பாதிக்கப்பட்டவா்களின் மொத்த எண்ணிக்கை 267,077 ஆக உயர்ந்துள்ளது.
வியாழக்கிழமை 6,111 மற்றும் புதன்கிழமை 5,429 புதிய தொற்று நோயாளர்கள் பதிவான நிலையில் நேற்று இந்தத் தொகையில் மேலும் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் தொற்று நோய் மீண்டும் மிக வேகமாகப் பரவி வருவது குறித்து பிரான்ஸ் சுகாதார அமைச்சு கவலை தெரிவித்துள்ளது. புதிய தொற்று நோயாளர்களில் பெரும்பாலானவா்கள் இளைஞர்கள் எனவும் சுகாதார அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.
இதேவேளை, நேற்று வெள்ளிக்கிழமை 20 பேர் கொரோனாவால் உயிரிழந்த நிலையில் பிரான்ஸில் மொத்த கொரோனா மரணங்கள் 30,596 ஆக அதிகரித்துள்ளன.
தொற்று நோய் தொடர்ந்து அதிகரித்து வருவது குறித்து நேற்றுக் கருத்து வெளியிட்ட பிரான்ஸ் ஜனாதிபதி மக்ரோன், நிலைமை கட்டுப்பாட்டை மீறினால் மீண்டும் தேசிய அளவில் சமூக முடக்கம் அறிவிக்கப்படுவதை தவிர்க்க முடியாது எனக் கூறினார்.
எனினும் பொருளாதாரத்தை சீரழிக்கும் கட்டுப்பாடுகளை இயன்றவரை தவிர்க்க விரும்புவதாக அவர் குறிப்பிட்டார்.
தொற்று நோயை எதிர்த்துக் போராடுவதில் கட்டுப்பாடுகள் மிகவும் முக்கியமானவை. எனவே, நாட்டு மக்கள் சுகாதார-பாதுகாப்பு வழிகாட்டல்களைப் பின்பற்றிக் கட்டுப்பாட்டுடன் நடந்துகொள்ள வேண்டும் எனவும் மக்ரோன் கோரிக்கை விடுத்தார்.
Category: உலகம், புதிது
Tags: கொரோனா (COVID-19), பிரான்சு